டில்லி:
டில்லி  முன்னாள் முதல்வர்  ஷீலா தீட்சித்தின் மகளை தாக்க முயன்ற மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

லத்திகா -ஷீலா தீட்சித்
லத்திகா -ஷீலா தீட்சித்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான  ஷீலா தீட்சித்தின் மகள் லத்திகா.  இவரது கணவர் சையது முகமது இம்ரான். இவர்கள் டில்லி ஹைலி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்கள்.
கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக லத்திகா புகார் அளித்ததின் பேரில்,  அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், இம்ரானுக்கு எதிராக, உள்ளூர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சஷிகாந்த் ஷர்மா உள்ளிட்ட சிலர் சாட்சியம் தெரிவித்துள்ளனர். இதற்கு பழிவாங்கும் வகையில், தனது மனைவி லத்திகா, மகள் மற்றும் சஷிகாந்த் ஷர்மா ஆகியோர் மீது தாக்குதல் நடத்த இம்ரான் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி, கடந்த நவம்பர் 17ம் தேதி நள்ளிரவு லத்திகாவின் அடுக்குமாடி குடியிருப்பு முன்பாக, 10க்கும் அதிகமான ரவுடிகள் கூட்டமாக நின்றுள்ளனர். இதைப் பார்த்ததும் உஷாரான சஷிகாந்த் ஷர்மா, போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வருவதற்குள்ளாக, அங்கிருந்த ரவுடிகள் தப்பியோடிவிட்டனர்.  அவர்களில் மூவரை மட்டும் சஷிகாந்த் ஷர்மா மற்றும் அவரது நண்பர்கள் பிடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.