டில்லி:

இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு நாளை உச்ச நீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலோடு நடைபெறும் என்று  தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதை எதிர்த்து,  திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உடனே விசாரிக்க திமுக தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினார். ஆனால், அன்றைய தினம் நிறை வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்ததால், 28ந்தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் கூறியது.

இந்த நிலையில், வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. மற்ற தொகுதிகளுடன் சேர்த்து, அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிடுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, காலியாக உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதியுடன், எம்எல்ஏ கனகராஜ் மறைவை தொடர்ந்து, காலியாக அறிவிக்கப்பட்ட சூலூர் தொகுதி உள்பட 4 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.

ஆனால், தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கான தேதி முடிவடைந்து வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வரும் வேளையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலோடு, 3 தொகுதி இடைத் தேர்தலையும் நடத்துவதற்கு சாத்தியமில்லை என்றே தெரிகிறது.