டெல்லி சோனியா விஹார் பகுதியில் பூ வியாபாரம் செய்பவர் ராஜ்குமார் சைனி இவரது 7 வயது மகன் ரவி-க்கு உடல்நிலை சரியில்லாததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் அழைத்துச் சென்றுள்ளனர்.

ரவிக்கு ரத்த புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளதை அடுத்து அவரை மருத்துவமனையில் வைத்து பார்க்க முடியாது என்று வீட்டிற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து ரவியின் தாய் சாந்தியின் சகோதரி சுதா கூறிய ஆலோசனையைக் கேட்டு கங்கையில் நீராட சென்றுள்ளனர்.

ரவியை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர் ராஜ்குமார் மற்றும் சாந்தி உடன் சென்ற சுதா உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதிக்கரையில் உள்ள ஹர்கி படித்துறை அருகே கங்கையில் இறங்கி நீராடி உள்ளனர்.

அப்போது அந்த சிறுவனை நீருக்குள் 5 நிமிடம் வரை மூழ்கி இருக்கும்படி அவனது தலையை நீருக்குள் அழுத்திப் பிடித்த நிலையில் மூச்சு திணறி சிறுவன் இறந்துபோனான்.

இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.