டில்லி:

2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்  அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

2ஜி வழக்கு தொடர்பான விசாரணையை  விரைந்து விசாரிக்க கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ மனு குறித்து விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

கடந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின்போது, திமுகவை சேர்ந்த ஆ.ராஜா தொலை தொடர்பு அமைச்சராக பதவி வகித்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தததில்,  ரூ.1.76 லட்சம் கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ந்தேதி  சிபிஐ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

அப்போது,   வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி உள்பட 14 பேரை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் டில்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு (2018) மார்ச் 19ந்தேதி மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 30ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில்,  2ஜி வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் புதிய  மனு தாக்கல் செய்தது. இது மனுமீதான விசாரணையை தொடர்ந்து, ராஜா, கனிமொழி உள்பட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.