சென்னை: சென்னையில் இந்தக் கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பம் நேற்று பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக தலைநகர் சென்னையில் ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது 34.5 டிகிரி செல்சியஸ் அளவில் தான் இருக்கும். ஆனால், வெள்ளிக்கிழமை  நுங்கம்பாக்கத்தில் 41.6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகி உள்ளது. இந்தக் கோடைக்காலத்தில் சென்னையில் நேற்று முதல் முறையாக கோடை வெப்பமானது 40 டிகிரியை எட்டிவிட்டது.

நுங்கம்பாக்கத்தில் மட்டுமல்லாமல், தாம்பரம், மீனம்பாக்கம், மாதவரத்திலும் 41 டிகிரி செல்சியஸை விட அதிகமாகவே வெப்பம் பதிவாகியுள்ளது.  சென்னையில் இந்த நிலை என்றால், தமிழகத்தின் மிக வெப்பமான பகுதிகளாக ஈரோடு, வேலூர், கரூர், திருத்தணி ஆகியவை இடம்பெற்றுள்ன. ஈரோட்டில் நேற்று 43 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த ஒரு சில நாள்களாக நாட்டில் அதிக வெப்பம் நிறைந்த 5 பகுதிகளில் ஈரோடும் இடம்பெற்றுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பால் பொதுமக்கள், வேட்பாளா்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினா் திறந்தவெளியில் வேலை செய்வது, ஊா்வலமாக செல்வதை நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது: வட மேற்கு திசையில் இருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று வீசுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூா், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை உள்பட 27 மாவட்டங்களில் நாளை வரை அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 டிகிரியில் இருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். எனவே, பொதுமக்கள், விவசாயிகள், தோ்தல் வேட்பாளா்கள், வாக்காளா்கள் மற்றும் போக்குவரத்துக் காவலா்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது, ஊா்வலம் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.