டெல்லி: தமிழகத்தில் அரியலூர், கோவை உள்பட 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்தியஅரசு  தெரிவித்து உள்ளது.

பாராளுமன்ற மழைக்காலக்கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இடையிடைய பெகாசஸ் விவகாரம் தொடர்பான அமளி காரணமாக அவைகள் முடக்கப்பட்டு வந்தாலும் அவ்வப்போது சில மசோதாக்களும், விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மக்களவையில், கல்வி தொடர்பாக விவாதத்தின்போது உறுப்பினர் எழுப்பிய கேள்விக்குபதில் அளித்த  மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமான பதில் அளித்துள்ளார்.

அதில்,  நாடு முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 41 மாவட்டங்களும், மத்தியப் பிரதேசத்தில் 39 மாவட்டங்களும் கல்வியில் பின்தங்கியிருப்பதாக மத்திய உயர்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, மொத்த கல்வி விகிதம், மாணவர் சேர்க்கை விகிதம், கல்லூரி- மக்கள் தொகை விகிதம் உள்ளிட்ட அளவுகோள்கள் அடிப்படையில் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களை அடையாளம் கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ததமிழகத்தில் அரியலூர், கோவை, கன்னியாகுமரி, மதுரை, நாகை, சேலம், நெல்லை உள்ளிட்ட 27 மாவட்டங்களும் கல்வி வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.