சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 25000 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர். ஏற்கனவே மாநில அரசில் 1.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் மேலும் 25,000 இடங்கள் காலி பணியிடங்களாக  உருவாகியுள்ளது.

தமிழகஅரசு ஊழியர்களின் பணி ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்திய நிலையில், இன்று ஒரேநாளில் 25ஆயிரம் பேர் பணி ஓய்வு பெறுகின்றனர். இதுவே ஒய்வுபெறும் வயது 58ஆக தொடர்ந்திருந்தால், மேலும் 50ஆயிரம் பேர் ஓய்வு பெற்றிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்றும், இதனால், 75ஆயிரம்  இளைய சமுதாயத்தினருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர். முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60ஆக மாற்றப்பட்ட நிலையில் தற்போது முதல்முறையாக 25,000 பேர் இன்றுடன் தங்கள் பணியை நிறைவு செய்கின்றனர். புதிய நடைமுறையின்படி,கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் தற்போது கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெறுகின்றனர்.

ஏற்கனவே மாநில அரசின் துறைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது 30-க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் 25,000 பணியிடங்கள் காலியாகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.