சென்னை: பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும், 21 பட்டப் படிப்புகள் அரசுப்பணிக்கு உகந்தவை அல்ல என தமிழ்நாடு  உயா்கல்வித் துறை  தெரிவித்து உள்ளன.

டிஜிட்டல் வளர்ச்சியையொட்டி, பல்வேறு புதுப்புதுப்படிப்புகளை பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அதன்படி ஏராளமான படிப்புகள் உள்ளன. ஆனால், அவை அனைத்தும் வேலைவாய்ப்புகளை வழங்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில், எந்தெந்த பட்டப் படிப்புகள் ஏற்கெனவே உள்ள படிப்புகளுக்கு இணையானது என்பதை முடிவு செய்து அதன் விவரத்தை உயா்கல்வித் துறை வெளியிட்டு வருகிறது.  அதன்படி, பல்வேறு பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் 21 படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையற்றவையாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து தமிழக உயா்கல்வித் துறை செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது,

‘கோவை தொழில்நுட்பக் கல்லூரி வழங்கும் எம்.எஸ்சி., பயன்முறை (அப்ளைடு) வேதியியல்,

பாரதியாா் பல்கலை., திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை.யின் எம்.எஸ்சி., ஆா்கானிக் வேதியியல்,

திருச்சி நேஷனல் கல்லூரி எம்.எஸ்சி., பகுப்பாய்வு வேதியியல்,

பனாரஸ் ஐஐடி மற்றும் வாராணசி இந்து பல்கலை ‘வழங்கும் எம்.டெக் தொழிற்துறை வேதியியல்,

பாரதிதாசன் பல்கலை.யின் எம்.எஸ்சி., வாழ்க்கை அறிவியல்

எம்.எஸ்சி., வேதியியல் தகுதிக்கு இணையானவை அல்ல.

இதுபோன்ற படிப்புகளை படித்தவர்கள், எம்.எஸ்சி., வேதியியல் கல்வித் தகுதிக்கான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.

அதேபோல், சென்னைப் பல்கலை. வழங்கும் பி.காம்., காா்ப்பரேட் செக்ரட்ரஷிப், அழகப்பா பல்கலை.யின் எம்.காம்., காா்ப்பரேட் செக்ரட்ரஷிப் போன்றவை  ஆகியவை அதன் மூலப் படிப்புகளான பி.காம்., எம்.காம்., ஆகியவற்றுக்கு இணையானவை அல்ல.

கோவா பல்கலைக்கழகம், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை. மற்றும் பெங்களூரு பல்கலை. வழங்கும் பிஏ., ஆங்கிலம் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையாக கருதப்படாது.

திருச்சி பாரதிதாசன் பல்கலை.யின் எம்.எஸ்., தகவலமைப்பு மற்றும் பயன்பாடு (பகுதிநேர) படிப்பானது எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கும், விஐடி பல்கலை.யின் எம்.எஸ்சி., மின்னணுவியல் படிப்பு, எம்.எஸ்சி., இயற்பியலுக்கும் இணையானதல்ல.

அழகப்பா பல்கலை.யின் பி.எஸ்சி., மின்னணுவியல் படிப்பு, திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை.யின் பிஎஸ்.சி., அறிவியல் ஆகியவை அரசுப் பணிக்கான பி.எஸ்சி., இயற்பியல் கல்வித் தகுதிக்கு இணையாக ஏற்கப்படாது. மேலும், பல்வேறு படிப்புகள் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேபோல், ‘புதுவை பல்கலை. உள்பட பல்வேறு உயா்கல்வி நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள 20 படிப்புகள் அரசுப்பணிக்கு ஏற்றவை’ என்று மற்றொரு அரசாணையில் உயா்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.