சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இதுவரை 208 வாக்குறுதிகள் நிறைவேற்றி இருப்பதாக பெருமிதத்துடன் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தவர், எதிர்க்கட்சியினரின்  வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றும் என்று கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய விவாதத்தின்போதுஎதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை,  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதையடத்து, இன்று  சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ்  பேசினார். அப்போது, கொரோனா நிவாரண நிதி, பால் விலை குறைப்பு, அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்ற 5-ல் முதல் 4 வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.

பதவியேற்ற உடனேயே 5 கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணை வெளியிட்டேன். அதுபோல, சட்டமன்ற தேர்தலின்போது திமுக  தேர்தல் அறிக்கையில் சொல்லிய 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். சொல்லப்படாத திட்டங்களும் மேற்கொள்ளப்படும்.

இதுவரை 208 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக திமுக செயல்பட்டு வருகிறது. அனைத்து வாக்குறுதி களும் நிறைவேற்றப்படும். வேளாண்மைக்காக தனி பட்ஜெட், நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த முன்களப்பணியாளர்களுக்கு நிவாரணம். முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு போன்ற தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. கொரோனா பணியில் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. 3-ம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பேருந்துகளில் இலவச பயணம், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு 5 லட்சம் வைப்பு நிதி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன

கடந்த ஆட்சியாளர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 537 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன; ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச செல்போன், பொது இடங்களில் இலவச வைபை வசதி திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

எதிர்க்கட்சி கடந்த பத்தாண்டு காலத்தில் நிறைவேற்றாமல் போன அறிவிப்புகளில் மக்களுக்கு மிகவும் பயன்படும் தேவைகள் கண்டறியப்பட்டால் அந்த வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.