திருப்பூரில் உரிய ஆவணகளின்றி தங்கிய வங்கதேச வாலிபர்கள் 18 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து போலி ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

தொழில் நகரமான திருப்பூரில் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டத்தை சேர்ந்த வாலிபர்களும் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் தயாரித்து திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்த வங்கதேச வாலிபர்கள் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது புழல் சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூர் வேலம்பாளையம், சிறுபூலுவப்பட்டி பகுதிகளில் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் என கூறி கொண்டு வங்கதேசத்தை சேர்ந்த சில வாலிபர்கள் தங்கி, அப்பகுதிகளில் உள்ள பனியன் கம்பெனிகளில் வேலை பார்த்து வருவதாக வேலம்பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஆய்வாளர் ராஜன் தலைமையிலான காவலர்கள், அந்த இளைஞர்களை கண்காணித்து வந்தனர். நேற்று இரவு பனியன் தொழிலாளர்கள் ஒரு இடத்தில் கூடினார்கள். இதில் சந்தேகம் அடைந்த காவலர்கள், அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு 18 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தாங்கள் கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர். சிலர் முன்னுக்கு பின் முரணான தகவல்களையும் கூறினார்கள். இதனை தொடர்ந்து காவல்துறையினர் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது 18 பேரும் வங்கதேசத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்ததாக கூறி 18 நபர்களையும் கைது செய்த காவலர்கள், அவர்களிடமிருந்த போலி ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.