டெல்லி: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 27ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு 6 முனை போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில் பாஜகவும் களத்தில் குதிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அங்கு  தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடித்திட ஒரு பொது பார்வையாளர், ஒரு காவல் பார்வையாளர் என 2 தேர்தல் பார்வையாளர்களை இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.

பொது பார்வையாளராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் வருகிற 7ந் தேதி முதல் மார்ச் மாதம் 2ந் தேதி வரை அங்கு பணியில் இருப்பார்.

காவல் பார்வையாளராக ஆந்திராவைச் சேர்ந்த ஐ.பி..எஸ். அதிகாரி சுரேஷ்குமார் சாதிவ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வருகிற 7ந் தேதி முதல் தேர்தல் நடைபெறும் நாளான 27ந் தேதி வரை தேர்தல் காவல்பணியில் இருப்பார்.

இதைப்போல தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் ஜெயராமன் அருணாசல பிரதேச இடைத்தேர்தலுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரி இ.ரவீந்திரன் மேற்கு வங்காள இடைத்தேர்தலுக்கும் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறும் நாகாலாந்துக்கு 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பொது பார்வையாளர்களாகவும், 13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் காவல் பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களில் எஸ்.சுரேஷ்குமார், அஜய் யாதவ் ஆகியோர் தமிழ்நாட்டுக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்பதும், எல்.வி.அந்தோணி தேவ்குமார், டாக்டர் கே.எஜிலியரசன் ஆகியோர் உத்தரபிரதேசத்துக்கான ஐ.பி.எஸ். அதிகாரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைப்போல தமிழகத்துக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீரராகவ ராவ், ஹனிஷ் ஜாப்ரா, டி.ஜி.வினய் ஆகியோர் மேகாலயா மாநிலத்துக்கு பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.