சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (12ந்தேதி) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.

அதன்படி, நடப்பாண்டு பொங்கலையொட்டி,  19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், எந்தெந்த ஊருக்கு எந்த பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து கள் புறப்படும் என விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 19,484 பேருந்துகள் இயக்கப்படுகிறது என ஏற்கனவே போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  அறிவித்துள்ளார்.

அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு மட்டுமே கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

மற்ற போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்த, முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மாதவரம் பேருந்து நிலையம், கலைஞர் கருணாநிதி நகர் மா.போ.கழக பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனவரி 12, 13, 14 ஆகிய தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் தினசரி 2,100 பேருந்துகள் வீதம் மொத்தம் 6,300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். சென்னையில் இருந்து மட்டும் மேற்சொன்ன மூன்று நாட்களில் சிறப்பு பேருந்துகள் 4,706 பேருந்துகள் இயக்கப்படும். இதன்மூலம் மொத்தமாக 11,006 பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தமிழகம் முழுவதும் மொத்தமாக 19,484 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

பொங்கல் பண்டிகை முடிந்ததும் ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் மீண்டும் ஊர் திரும்பும் வகையில் வழக்கமான 2,100 உடன் 4,830 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து 6,459 பேருந்துகள் இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகான நாட்களில் மொத்தம் 17,589 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் :

பேருந்துகளை முன்பதிவு செய்ய கோயம்பேடு 5, தாம்பரம் மெப்ஸ் 1, கிளாம்பாக்கம் 5 என 11 முன்பதிவு மையங்கள் செயல்படும்.. அதாவது, (12/01/2024 முதல் 14/01/2024 வரை) கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம்,  கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம், MEPZ (தாம்பரம் சானிடோரியம்)  என மொத்தமாக 11 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.

முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24×7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.

மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை(ஜன.12) திட்டமிட்டப்படி சிறப்பு பேருந்துகள் இயங்கும் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கவும், பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பேருந்துகள் புறப்படும் இடங்கள்:

மாதவரம் புதிய பேருந்து நிலையம், கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம், கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.