சென்னை: தமிழ்நாட்டில்  வெளிநாட்டினர் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் தொழில் தொடங்குவதை கண்காணிக்காக தொழில்துறை அமைச்சர்  டிஆர்பி ராஜா தலைமையில் 17 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க, தமிழ்நாடுஅரசு சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், கடந்த ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 632 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது.

ஏற்கனவே, 2015 மற்றும் 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களிடமிருந்து 50 சதவீதம் கூட முதலீடுகள் வராத நிலையில், சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப் படுத்த அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும், ஒவ்வொரு ஒப்பந்தமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, முழுத் தொழில் வடிவம் பெறும் முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதன்படி,   தற்போது தமிழ்நாட்டில்,  தொழில் தொடங்குவதைக் கண்காணிக்க, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் சிறப்புக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்புக் குழுவில் தலைமைச் செயலாளர், தொழில்துறைச் செயலாளர், மின்வாரியத் தலைவர், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி, தேவைகளைக் கேட்டறிந்து, தொழில் துவங்க இக்குழு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.