சென்னை:

9 ஆயிரத்து 351 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் நேற்று எழுதினர்.

தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் பதவி (494), இளநிலை உதவியாளர் (4,096), இளநிலை உதவியாளர் பிணையம் (205), வரித்தண்டலர் (48), நில அளவையர் (74), வரைவாளர் (156), தட்டச்சர் (3,463), சுருக்கெழுத்து தட்டச்சர்(815) என 9 ஆயிரத்து 351 பணி இடங்களை நிரப்ப முதன்முறையாக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு பிப்ரவரி நேற்று (11-ம் தேதி) நடந்தது.

டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றில் அதிகபட்சமாக இந்த தேர்வை எழுத 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் நேற்று இந்த தேர்வு   6 ஆயிரத்து 962 மையங்களில் நடந்தது.  . சென்னையில் 508 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 1 மணி வரை 3 மணி நேரம் இத் தேர்வு நடந்தது.

17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் (84.71 சதவீதம்) தேர்வு எழுதினர். 3 லட்சத்து 16 ஆயிரத்து 392 பேர் (15.29 சதவீதம்) தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

சென்னையில் தேர்வு எழுதுவதற்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 120 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 894 பேர் (78 சதவீதம்) தேர்வு எழுதினர். 35 ஆயிரத்து 226 பேர் (22 சதவீதம்)  தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

தேர்வு கண்காணிப்பு பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் ஈடுபட்டனர். முறைகேடுகளை தடுக்கும் வகையில், தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் ‘வீடியோ’ மூலம் பதிவு செய்யப்பட்டன. 170 தேர்வு மையங்கள் ‘வெப் கேமிரா’ மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டன. 685 பறக்கும் படை கண்காணிப்புக்குழுவினர் தேர்வு மையங்களை சுற்றி வந்து கண்காணித்தனர்.

தேர்வு மைய நுழைவுவாயில்களில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மின்னணு கருவிகள், கைக்கெடிகாரம், மோதிரம்  போன்றவை தேர்வு அறைக்குள் தடை செய்யப்பட்டன.

கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி.   தேர்வுகளில் சில தேர்வர்கள் விடைத்தாள்களில் தங்களது பதிவு எண்களை தவறாக எழுதியதால் அவர்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன. ஆகவே இந்த முறை தேர்வர்கள் பெயர், புகைப்படம், பதிவு எண், விருப்ப பாடம், தேர்வு மையத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் அச்சடிக்கப்பட்ட விடைத்தாள் அளிக்கப்பட்டது.

மேலும் விடைத்தாளில் பதில் அளிக்காமல் விடப்பட்டுள்ள கட்டங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு அதனை குறிப்பிடும் முறையும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக தேர்வு நேரம் முடிந்த பின்னர் தேர்வர்களுக்கு 5 நிமிடம் கூடுதலாக கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த புதிய நடைமுறையால் குரூப்-4 தேர்வு முடிவுகள் கால தாமதமின்றி வெளியாகும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.