சென்னை:

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, தமிழகத்தில் 130 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என்று தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீ கரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த ஆண்டு அண்ணா பதக்கத்துக்கு 130 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பதக்கம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலை காவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில்  மாவட்ட அலுவலர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அலுவலர்களுக்கும் இந்த ஆண்டு பதக்கம் வழங்கப்படு கிறது.

சிறைத்துறையில் துணை சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில்  மண்டல தளபதி முதல் பிரிவு தலைவர் வரையிலான 5 அலுவலர்களுக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.

விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை துணை இயக்குநர் ஒருவர் மற்றும் ஒரு அறிவியல் அலுவலருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது. பதக்கங்கள் பெறுகின்ற அலுவலர்களுக்கு அவரவர்  பதவிக்கேற்றவாறு, மானியத் தொகையும் வெண்கல பதக்கமும் அளிக்கப்படும்.

தமிழக முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான காவல் பதக்கம், மணல் திருட்டை தடுக்கும்பொழுது தன்னுயிர் நீத்த முதல் நிலைக் காவலர் எஸ்.ஜெகதீஷ் துரைக்கு  வழங்கப்படுகிறது.  அவரது குடும்பத்திற்கு பண வெகுமதி 5 லட்ச ரூபாய் வழங்கப்படும்.

பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பின்னர் நடைபெறும்  விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  பதக்கங்களை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.