சென்னை: 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே நடைபெறும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நேரடி தேர்வுகள் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நேரடித்தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ள பள்ளி கல்வித்துறை, பொதுத்தேர்வுக்கான தேதிகளையும் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே, மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு) / இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு, மே 2022க்கான வினாத் தாள்கள் வழங்கப்படும்.

எனவே, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பாடத் திட்டத்தினை அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கி, பாடங்களை விரைந்து முடிக்க அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.