சென்னை: தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையை வருவதையொட்டி சென்னையில் இருந்து வெளி ஊர்களுக்கு  1000 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால், 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியதோடு பள்ளிகளிலும் ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ஏராள மானோர் விடுமுறை நாட்களை கொண்டாட வெளிஊர்களுக்கும், குளிர் பிரதேசங்களையும் நாடத் தொடங்கி உள்ளனர். கடந்த இரு ஆண்களாக கொரோனா தொற்று காரணமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்த நிலையில், தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டதால், மக்கள் மீண்டும் தங்களது இயல்புவாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இதையடுத்து, கோடை விடுமுறையை கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். இதனால்,   பஸ், ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டும், 15-ந் தேதி புனித வெள்ளி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்காக அரசு விடுமுறையும், தொடர்ந்து 16 (சனி), 17 (ஞாயிறு) ஆகிய விடுமுறை தொடர்ந்து வருவதால் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாளாக உள்ளது.  அத்துடன் 16-ந் தேதி சித்ரா பவுர்ணமி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஏராளமான இந்துக்கள் விடுமுறை எடுத்து கோவில்களுக்கு செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஏராளமானோர் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்வது வழக்கம்.

இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக 1000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன. தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியையொட்டி 13-ந் தேதி கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.

விழுப்புரம், சேலம், கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகங்களின் சார்பில் கூடுதல் பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன.

16-ந்தேதி சித்ரா பவுர்ணமியையொட்டி விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் மட்டும் கூடுதலாக 500 பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து விடப்படுகிறது.

இதுகுறித்து கூறிய போக்குவரத்து துறை அதிகாரிகள்,  14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனக்கருதி 1000 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 13-ந் தேதி வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் 500 பஸ்களும், 16-ந் தேதி சித்ரா பவுர்ணமி என்பதால் அன்று 500 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக இந்த சேவை இயக்கப்பட உள்ளன. அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. மற்ற பஸ்களுக்கு முன்பதிவு தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.