சென்னை: தமிழ்நாட்டில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது காலி மனைகளுக்கான வரியையும் 100 சதவிகிதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி குறைந்த பட்சம் 25 சதவிகிதம் முதல் அதிக பட்சமாக 150 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது காலி மனைகளுக்கான வரியையும் 100 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தி தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சொத்துவரி சீராய்வு பணிகள் முடித்து வழக்கமான முறையில் வரிவிதிப்புகள் செய்திட 3 மாத கால அவகாசம் தேவைப்படுவதால், அதுவரை கட்டிட அனுமதி விண்ணப்பம் செய்பவர்களின் நலனை கருதியும், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் வருவாய் இழப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி, காலிமனை வரிவிதிப்பை பொறுத்தவரை 100% உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், சொத்துவரி சீராய்வு நடைமுறைகள் முடிவுக்கு வரும்வரை புதிதாக பெறப்படும் காலிமனை வரிவிதிக்க கோரும் விண்ணப்பங்களை உரிய விதிகளை பின்பற்றி பரிசீலனை செய்து பல்வகை ரசீது / வைப்பு ரசீதாக தற்காலிகமாக வழங்கலாம் எனவும், சீராய்வு பணிகள் முடிவுற்றவுடன் புதிய வரி விகிதங்களின் படி வரிவிதிப்பு செய்தல் வேண்டும்.

அவ்வாறு கணக்கீடு செய்த வரிவிதிப்பு கேட்பு தொகையினை ஏற்கெனவே பல்வகை / வைப்புத் தொகையாக வசூலிக்கப்பட்ட தொகையினை ஈடு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கட்டிட விண்ணப்ப நடைமுறை தடையின்றி செயல்பட மென்பொருளில் தேவையான மாற்றங்களை செய்ய இவ்வலுவலக கணினி ஆராய்வாளர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். எனவே, சொத்துவரிக்கான சீராய்வு பணிகள் நிறைவடைந்தவுடன் புதிய வரி விகிதங்களின் படி வரிவிதிப்பு செய்யப்படும் என்று மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.