சென்னை: மருத்துவப் படிப்பில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சென்னை  உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவபடிப்புகளுக்கான இடம் நீட் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இடஒதுக்கீடு முறையில் சேர்க்கை நடப்பாண்டு முதல் நடைபெற வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்தியஅரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடர்பாக தமிழகத்தில் திமுக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்,   மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 2020ம் ஆண்டு ஜூலையில் உத்தரவிட்டது. ஆனால், மத்தியஅரசு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது.

இதனால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மீது மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது நீதிமன்ற அவமதிப்பு என  திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தைத் தொடர்ந்து,   பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை உச்சநீதிமன்ற உத்தரவு இல்லாமல் மத்திய அரசு மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வாதங்களைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதன் காரணமாக, இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மருத்துவப் படிப்புகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவது உறுதியாகி உள்ளது.