சென்னை

பாஜகவுக்கு ’இந்தியா’ கூட்டணியால் அச்சம் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட்   கட்சி பொதுச் செயலர் டி ராஜா கூறி உள்ளார்.

சென்னையில் உள்ள தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.  இதற்குப் பாலன் இல்லம் என பெயரிடப்பட்டுள்ளது. பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ராஜா,

” ஒரு நாடு ஒரு தேர்தல் என்று தற்போது சொல்பவர்கள் வருங்காலத்தில் ‘ஒரு நாடு ஒரு கட்சி’, ‘ஒரு நாடு ஒரு தலைவர்’, என்ற நிலைக்குப் போகக் கூடிய அபாயம் இருக்கிறது.  இதுவே சர்வாதிகாரம். இந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது ஏற்புடையது அல்ல, இதைச் செயல்படுத்த முடியாது.  இது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாதது. இந்திய கம்யூனிஸ்ட் மட்டுமன்றி மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஏற்கவில்லை.

இந்தியப் பொருளாதாரம் மிக பெரியளவில் வளர்ந்திருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் சொல்கிறார். ஆனால் இன்றைக்குப் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. இதற்கு எல்லாம் மோடியின் ஆட்சியில் பதில் எதுவும் இல்லை.

’இந்தியா’ கூட்டணி நாட்டை காப்பாற்ற வேண்டும், ஜனநாயகத்தைக் காப்பாற்ற பா.ஜ.க.                ஆட்சியை அகற்றவேண்டும் என்ற குறிக்கோளோடு உருவாகி இருக்கிறது. பா.ஜ.க.வுக்கு இதனால் அச்சம், பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே சனாதன விவகாரத்தை பா.ஜ.க.தான் பிரச்சினையாக்கி சனாதனத்துக்கான எதிர்ப்பை ஒரு மதத்துக்கான எதிர்ப்பு போன்று திசை திருப்பி உள்ளது.”

என்று கூறி உள்ளார்.