சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தேர்தலில்  மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்களின் 4-வது பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. அதையடுத்து, வேட்புமனு தாக்கல் : ஜனவரி 28ந்தேதி தொடங்கி பிப்ரவரி 4ந்தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 5ந்தேதி வேட்பு மனு பரிசீலனையும், பிப்ரவரி 7ந்தேதி வேட்புமனு வாபஸ் பெறும் நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து பிப்ரவரி 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.

இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்க உள்ளன. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  4-வது கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைவர் கமல்ஹாசன் இன்று  வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள் டிவிட்டில்,  மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வேட்பாளர்களின் 4-ஆவது பட்டியலை வெளியிடுகிறேன். இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மாற்றத்திற்கு வாக்களியுங்களென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பட்டியலில், சென்னை, கோவை , சேலம், திண்டுக்கல், கரூர் மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் உடுமலைப்பேட்டை, கொடைக்கானல் , தேனி அல்லிநகரம், பெரியகுளம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம்,  நாகை ,சீர்காழி, மயிலாடுதுறை நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் உள்பட மொத்த 150  வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.