சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கம், தங்களுக்கு ஆட்டோ சின்னம் வழங்க வண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. ஆனால், அதற்கு மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. அதையடுத்து, வேட்புமனு தாக்கல் : ஜனவரி 28ந்தேதி தொடங்கி பிப்ரவரி 4ந்தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 5ந்தேதி வேட்பு மனு பரிசீலனையும், பிப்ரவரி 7ந்தேதி வேட்புமனு வாபஸ் பெறும் நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து பிப்ரவரி 19ந்தேதிவ க்குப்பதிவு நடைபெற்று பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில்  விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தங்களது அமைப்புக்கு  ஆட்டோ சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாநில தேர்தல் ஆணையத்திடம்  கேட்டனர்.

ஆனால், அதை ஏற்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதுடன்,  இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.  பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மட்டுமே பொது சின்னம் ஒதுக்கப்படும் என்றும், பதிவு செய்யப்படாத நிலையில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது. சுயேட்சை வேட்பாளர்களுக்கு சுழற்சி முறையில் சின்னங்கள் ஒதுக்கப்படும் என பதில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றிருந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிக வெற்றிகளை பறிக்க வியூகம் வகுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.