தமிழகத்தில் தனியார் பால்களின் விலை ஜுன் 1ம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனமும் 5 தனியார் பால் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து இவைகள் பாலை கொள்முதல் செய்து பதப்படுத்தி தரம் பிரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்கின்றன. ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. ஆரோக்கியா, ஹெரிட்டாஷ், டோட்லா, ஜெசி, திருமலா போன்ற ஆந்திர மாநில பால் நிறுவனங்களும் போட்டி போட்டு பால் வினியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 10 குறைவாக விற்கப்படுகிறது. அதனால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. ஆவின் பால் புல் க்ரீம் லிட்டர் ரூ. 45, சமன்படுத்தப்பட்ட பால் ரூ. 37க்கு விற்கப்படுகிறது.

இந்த நிலையில் தனியார் பால் விலை ஜுன் 1ம் தேதி முதல் லிட்டருக்கு ரூ. 2 உயர்கிறது. ஆரோக்கியா மற்றும் ஹட்சன் பால் விலை மட்டும் உயருகின்றன. கொள்முதல் விலையை காரணம் காட்டி விலை உயர்த்தப்படுவதாக அந்நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

ஆரோக்கியா புல் க்ரீம் லிட்டர் பால் ரூ. 54ல் இருந்து ரு. 56 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ. 42ல் இருந்து ரூ. 44 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. ஹெரிட்டேஜ் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ. 48ல் இருந்து ரூ. 50 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ. 52ல் இருந்து ரு. 54 ஆகவும் உயருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பால் முகவர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி, “தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகின்றன. இந்த வருடத்தில் விலை உயர்வு இரண்டாவது முறையாகும். இதனை அரசு தடுக்க வேண்டும். விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.