சென்னை

ஐபிஎல் 2023 நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வென்று புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடத்துக்கு முன்னேறி  உள்ளது.

தற்போது 16வது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்.எஸ் தோனி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.  முதலில் மும்பை அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் கிரீனும் , இஷான் கிஷனும் களமிறங்கினர். அவர்களில் கிரீன் 6 ரன்னிலும், இஷான் கிஷன் 7 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

அவர்களை அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இதனால்,அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார்.

மும்பை அணி தொடக்கத்திலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  இதைத் தொடர்ந்து நிஹால் வதேராவும், சூரியகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சூர்யகுமார் யாதவு 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பிறகு நிதானமாக விளையாடிய வதேரா, அரைசதம் கடந்தார். அவர் 51 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் கடந்த போட்டிகளில் அதிரடியில் மிரட்டி வந்த டிம் டேவிட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சென்னை அணியின் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், மும்பை பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க திணறினர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது.

இதில் சென்னை அணி தரப்பில் தீக்ஷனா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் தீபக் சாகர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதைத் தொடர்ந்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், டிவோன் கான்வேயும் களமிறங்கினர். இவர்கள் இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.  இதில் கெய்க்வாட், தன் பங்குக்கு 16 பந்துகளில் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பிறகு ரஹானே 21 ரன்களும், ராயுடு 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மேலும் கான்வே 44 ரன்கள் எடுத்தார்.

போட்டியில் மும்பை அணியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்ட சென்னை பேட்ஸ்மேன்கள், அவ்வபோது பவுண்டரிகளை விளாசி ரன்ரேட்டை உயர்த்தினர். மும்பை பவுலர்களால் சென்னை அணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆட்ட இறுதியில் சென்னை அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது.