சென்னை

இன்று மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்தியக் குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதற்கு மத்திய அரசிடம் நிவாரணமாக ரூ.5,060 கோடி கோரிய முதல்வர் மு.க.ஸ்டாலின்  சேதங்களை, ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

கடந்த 7 ஆம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சென்னை வந்து பாதிப்புகளைப் பார்வையிட்டு சென்றார். மழை, வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், 6 பேர் கொண்ட மத்தியக் குழு அமைக்கப்பட்டது. மத்தியக் குழுவினர் நேற்று இரவு டில்லியில் இருந்து சென்னை வந்த கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினர்.

இவர்கள் இன்று காலை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்திக்கின்றனர். அவர்கள், 2 குழுக்களாக பிரிந்து, ஒரு குழுவினர் வடசென்னை, மத்திய சென்னை, ஆவடி, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும், மற்றொரு குழுவினர் தென்சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்கின்றனர். குழுவினருடன் தமிழக அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களும் செல்கின்றனர்.

மத்தியக் குழுவினர் நாளையும் ஆய்வு செய்த பின்னர் தலைமைச் செயலகம் வந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசித்த பிறகு, நாளை இரவு டில்லி திரும்புகின்றனர். இந்தக் குழு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க உள்ளது.