சென்னை

ன்று மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில்காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில்,

நாட்டின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற முக்கியமான துறைகளுக்கு மோடி அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதோடு, அந்த அமைப்புகளை தன் அரசியல் லாபத்திற்காகத் தவறாக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. உண்மைகளை மூடிமறைக்க மோடி தலைமையிலான இந்த பா.ஜ.க. அரசு செய்த பொய் பித்தலாட்டங்கள் அனைத்தும் எஸ்.பி.ஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த கால நீட்டிப்பு மனுவின் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பா.ஜ.க. பாரத ஸ்டேட் வங்கியை தன் கைப்பாவையாகப் பயன்படுத்தி இதுவரை செய்த முறைகேடுகள் மற்றும் சதிகளைக் கண்டித்து இன்று அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் மாநிலம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அகில இந்தியக் காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது. 

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும், அந்தந்த மாவட்டங்களிலும் அதேபோல் வட்டார அளவிலும் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு பா.ஜ.க.வுக்கு சாதகமாக செயல்பட்டுவரும் வங்கியின் முறைகேடுகளைக் கண்டித்து பெருந்திரள் போராட்டம் நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், நடுவண் அரசின் முன்னாள் அமைச்சர்கள், அகில இந்தியக் காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கமிட்டியின் அனைத்து நிலை நிர்வாகிகள், வட்டார கமிட்டியின் அனைத்து நிலை நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும். 

எனது தலைமையில் சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் உள்ளூர் தலைமை அலுவலகத்தின் முன்பு பிற்பகல் 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இதில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றுக் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்

என்று கூறப்பட்டுள்ளது.