லப்புரம்

ரு கேரள இளைஞர் நடை பயணமாகக் கேரளாவிலிருந்து மெக்காவுக்குச் சென்றுள்ளார்.

முஸ்லிம்களின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம்  மேற்கொள்வது. இப்பயணத்தைக் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 6 நாடுகள் வழியாக நடந்தே சென்று நிறைவு செய்துள்ளார்.இது குறித்த விவரம் வருமாறு

ஷிஹாப் சோட்டூர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரியைச் சேர்ந்தவர் ஆவார், ஷிஹாப் சோட்டூர் தனது யூடியூப் சேனலில், தன்னுடைய பயணம் குறித்த வீடியோ பதிவுகளை அதில் வெளியிட்டு வந்தார். கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி தொடங்கிய இவரது ஹஜ் பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தன்னுடைய நடைப்பயணத்தில் இவர் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளைக் கடந்து, இறுதியில் சவூதி அரேபியாவை அடைந்துள்ளார். இவர் இந்திய மாநில எல்லைகளைக்  கடந்து இறுதியாக வாகா எல்லைக்குள் நுழைந்தபோது, விசா இல்லாததால் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பிறகு போக்குவரத்து விசாவை பெறுவதற்காக வாகாவில் உள்ள ஒரு பள்ளியில் பல மாதங்கள் தங்கி காத்திருந்து கடந்த பிப்ரவரி மாதம், ஷிஹாப் ட்ரான்ஸிட் விசாவைப் பெற்று பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். மேலும் சிறிது இடைவெளிக்குப் பிறகு ஈரான், ஈராக், குவைத் நாடுகளை கடந்துள்ளார்

சென்ற மாதம் இரண்டாவது வாரத்தில் குவைத்தில் இருந்து சவூதி அரேபிய எல்லைக்குள் நுழைந்த அவர், அதன்பிறகு இஸ்லாமியப் புனிதத் தலமான மதீனாவுக்கு சென்றார். மெக்காவிற்குச் செல்வதற்கு முன் அவர் 21 நாட்கள் மதீனாவில் தங்கி இருந்தார்.  9 நாட்களில் மதீனாவிற்கும் மெக்காவிற்கும் இடையிலான 440 கி.மீ தூரத்தை ஷிஹாப் கடந்துள்ளார்.

இவ்வாறு மெக்காவுக்கு நடந்தே செல்ல வேண்டும் என்பது ஷிஹாப்பின் சிறு வயது கனவு என்றும், இதற்காக நாள் ஒன்றுக்கு 25 கி.மீ. அவர் நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.  8,640 கி.மீ தூரம் பயணத்தைக் கடக்க, அவர் 370 நாட்கள் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் மெக்காவுக்கு நடந்தே சென்ற சாதனைப் பட்டியலில் ஷிஹாப் இடம்பிடித்துள்ளார்.