இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் புதிதாக கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த மாதம் 23 ம் தேதி அதன் திறப்புவிழாவை கோலாகலமாக நடக்கவுள்ள அவர் அதற்கு ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்று பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடராஜன், “எனது கனவு நனவாகி உள்ளது. நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா குறித்து அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மைதானத்தின் திறப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுரவ தலைவர் பழனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ கே.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராமசாமி, நடிகர் யோகி பாபு மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

2015 முதல் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் 32 வயதான நடராஜன் 2017 ல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட தொடங்கினார். 2018 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் ‘யார்க்கர்’ வீசுவதில் வல்லவர்.

2020-ல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த இவர், ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் என அதே பயணத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டில் அறிமுக வீரராக விளையாடினார். கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டில் அவர் இந்திய அணிக்காக விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.