சென்னை: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி  பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளர்.

பருத்தி, நூல் விலை கடுமையாக உயர்ந்துவருவதால், நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் இன்றுமுதல் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம்நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்; பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் வேலைநிறுத்ததால் ஜவுளித் தொழில் முடங்கியது. நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்துமாறு ஏற்கனவே ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்தது. பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்த போதிலும் நூல் விலை விவகாரத்தில் நிலைமை சீரடையவில்லை. பருத்தி மற்றும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள், ஜவுளி நிறுவனங்கள் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. விலை உயர்வால் தமிழா ஜவுளித்தொழில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கருத்தில் கொள்ள வேண்டும். ஆலைகளில் பருத்தி மற்றும் நூல் இருப்பு குறித்த முழு விவரங்களை வெளியிட வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.