டில்லி

போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இன்று மத்திய அமைச்ச்ர் அனுராக் தாகூருடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.

ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி முதல் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இதையொட்டி பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது போக்சோ உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலியல் வழக்கு தொடர்பாக பிரிஜ் பூஷணிடம் டில்லி காவல்துறையினர் இதுவரை 2 முறை விசாரணை நடத்தியும் இதுவரை சரண்சிங் கைது செய்யப்படவில்லை.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷணை கைது செய்ய வேண்டும் என கூறி மலியுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நாட்டுக்காக வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீச முயன்றனர். விவசாய சங்கத்தினர் தலையிட்டு பதக்கங்களை கங்கையில் வீசும் முயற்சியைத் தடுத்து நிறுத்தினர்.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷணை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.  மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,  பிரச்சினைகள் தொடர்பாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் மல்யுத்த வீரர், வீராங்கனை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தாம் அழைப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

அழைப்பை ஏற்று கொண்ட மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயிட் விளையாட்டு மந்திரி அனுராக் தாகூரை அவரது வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்  பேச்சுவார்த்தைக்குச் சென்ற மல்யுத்த வீராங்கனைகள், அவரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.

“இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகப் பெண் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்,

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மல்யுத்த சங்கத்தின் தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் மல்யுத்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடாது.

மல்யுத்த அமைப்பிற்குச் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்,

டில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தங்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்,

 பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்ய வேண்டும் “

ஆகிய 5 முக்கிய கோரிக்கைகளை வீராங்கனைகள் முன்வைத்து உள்ளனர்.  இதை கவனிப்பதாக அமைச்சர் அளித்த வாக்குறுதியையொட்டி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போராட்டத்தை நிறுத்தி உள்ள்னர்.