வாழப்பாடி அருகே தயாரிக்கப்படும் உலகில் மிக உயரமான முருகன் சிலை, கும்பாபிேஷகத்திற்கு தயாராகி வருவது முருக பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பத்துமலை குகைக்கோவிலின் நுழைவுவாயிலில் அந்நாட்டின் செல்வந்தவர்களின் ஒருவரான கே. தம்புசாமி என்பவரால் கடந்த 2006ம் ஆண்டு உலகிலேயே மிக உயரமான முருகன் சுவாமியின் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டது. 140 அடி உயரத்தில் (42.7 மீட்டர்) மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள இந்த முருகன் சுவாமி சிலை சர்வதேச அளவில் இந்துக்களின் புனித திருத்தலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. பல்வேறு நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மலேசிய நாட்டின் பத்துமலை முருகனை தரிசிக்க செல்கின்றனர்.

இந்நிலையில், மலேசியாவில் முருகன் சிலையை மலேசியாவில் வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதியாரின் குழுவினர், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில், அச்சிலையை விட 6 அடி உயரமான முருகன் சிலையை வடிவமைத்து வருகின்றனர். இதனால், சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த கிராமம் இந்துக்களிடையே மிக பிரபலமாகி வருகிறது. சேலம் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்த தொழிலதிபர் முத்து நடராஜன் குடும்பத்தினர் சார்பில் புத்திரகவுண்டன்பாளையத்தில் தரைத்தளத்தில் இருந்து 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இச்சிலையே, இனி உலகிலேயே மிக உயரமான முருகன் சுவாமி சிலை என்ற இடத்தை பிடித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை அருகே மலைக்குன்று அடிவாரத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த பிரமாண்டமான முருகன் சிலையை தினந்தோறும் ஏராளமானோர் ஆச்சர்யத்தோடு பார்வையிட்டு செல்கின்றனர். உலகில் மிக உயரமான முருகன் ஸ்வாமி திருவுருவச்சிலை கட்டமைப்பு பணி முடிவடைந்த நிலையில், முக அமைப்பு, மேல்பூச்சு மற்றும் ஆடை ஆபரணங்கள் அமைக்கும் நுண்ணிய வேலைப்பாடுகளில் ஸ்தபதிகள் ஈடுபட்டுள்ளனர். இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 2020ம் ஆண்டு பங்குனி உத்திரத்திற்கு முன் முருகன் திருவுருவச்சிலை வர்ணம் தீட்டும் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, கும்பாபிேஷக நடத்துவதற்கு கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருவதால், சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள முருக பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேணிய முருகன் சிலையை அமைக்கும் திருப்பணியை மேற்கொண்டு வரும் ஆத்துார் தொழிலதிபர் ஸ்ரீதர், “முருகப்பெருமானை குலதெய்வமாக கருதி வணங்கும் எனது தந்தை முத்து நடராஜன் மற்றும் குடும்பத்தினர் விருப்பதிற்கேற்ப, மலேசியா பத்துமலை முருகன் சுவாமி சிலையை போன்று, புத்திரகவுண்டன்பாளையத்திலுள்ள எங்களது நிலத்தில் பிரமாண்டமான முருகன் சிலை வடிவமைக்கும் பணியை இரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினோம். மலேசியாவில் மிக நேர்த்தியாக முருகன் சுவாமி சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதியின் குழுவினரை கொண்டு, புத்திரகவுண்டன்பாளையத்திலும் முருகன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மலேசிய முருகன் சிலையைவிட 6 அடி கூடுதலாக 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் உலகில் மிக உயரமான முருகன் சுவாமி சிலை என்ற பெருமையை இச்சிலை பெறும். வரும் 2020–ம் ஆண்டு பங்குனி உத்திரத்திற்கு முன்பாக சிலைக்கு கும்பாபிேஷகம் நடத்திட திட்டமிட்டுள்ளோம். தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் மற்றும் பல்வேறு நாடுகளிலுள்ள முருகன் பக்தர்கள் பங்கேற்கும் வகையில், கும்பாபிேஷக விழா பிரமாண்டமாக அமையும். மண்டபம் அமைத்து தினந்தோறும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.