சென்னை,

சென்னையிலும் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் வெடிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்  வயதுவித்தியாசமின்றி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அரசின் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடிய தமிழக அரசு, அதை அருகிலுள்ள கிராம பகுதிகளில் மீண்டும் தொடங்கியது.

இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், மதுக்கடைகளை உடைத்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

சென்னை மேற்கு சைதாப்பேட்டை மேட்டுப்பாளையம் ரோட்டில் மது கடை மூட கோரி நூற்றுக்கணக்கான  பெண்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பரபரப்பான சூழல் அந்த பகுதியில் நிலவி வருகிறது.