சென்னை: கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில்,  துணிவு, வீர சாகச செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு  கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன்  ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், பதக்கமும் வழங்கப்படும். இந்த ஆண்டு விருதுக்கு தகுதி பெறும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “ கல்பனா சாவ்லா விருது ” ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் , சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த , துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்.

2021 – ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு , உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் , சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது htss://awards.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவோ அரசுச் செயலாளர் , பொதுத் துறை , தலைமைச் செயலகம் , சென்னை -600 009 அவர்களுக்கு 30.06.2021 – க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விருதுபெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.