கோவை:  ஓட்டுக்கு பணம் கொடுப்பது உள்பட வாக்காளர்கள் கொடுக்கும் புகார்கள்மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாடு முழுவதும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் கடந்த வாரம் தமிழ்நாட்டில் இரண்டு நாள் முகாமிட்டு தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழ்நாடு உள்பட தென்மாநில  தேர்தல் ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து,  தேர்தல் பணிகள் குறித்து மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்யும் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் கோவையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். பின்னர் செய்தியளார்களை சந்தித்தபோது,   “தேர்தலில் ஓட்டுப்பதிவு குறையும் ஓட்டுச்சாவடிகளை கண்டறிந்து, தீர்வு காணப்படும். இம்முறை கண்டிப்பாக ஓட்டுப்பதிவு அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், வாக்காளர்களுக்கு வாக்களிக்க  இலவசங்கள் வழங்கப்பட்டது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவார், வாக்காளர்களுக்கு  பணம், டோக்கன், பரிசுப் பொருட்கள் வழங்கினால், ‘சி-விஜில்’ மொபைல் செயலியில் புகைப்படம் அல்லது வீடியோவாக, பொதுமக்கள் அனுப்பினால், அடுத்த 100 நிமிடங்களில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், வருமானத்துறை, வணிக வரித்துறை, காவல்துறை, சுங்க வரித்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளையும் இணைத்து நடவடிக்கை எடுக்க, இ – எஸ்.எம்.எஸ்., அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்க, செலவின கணக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அறிக்கை கொடுப்பார்கள். அதுபோல மக்களும் தகவல் கொடுத்தால், நடவடிக்கை எடுக்கலாம். மாற்றுத் திறனாளிகளுகென, ‘சக் ஷம்’ என்ற செயலி இருக்கிறது. அவர்களுக்கு என்னென்ன தேவை என அதில் அவர்கள் தெரிவிக்கலாம்.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று ஓட்டுகளை பதிவு செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்களும் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களின் விருப்பத்தை அறிந்து, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பார்கள். 85 வயதுக்கு மேற்பட்டோரின் வீடுகளுக்குச் சென்று, தபால் ஓட்டுப்பதிவு செய்யும்போது, நேர்மையான ஓட்டாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, போலீஸ் அதிகாரிகள் உடன் செல்வார்கள். வீடியோவில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வாக்காளரே ஓட்டை பதிவு செய்கிறாரா என்பது உறுதி செய்யப்படும்” என்றார்.