சென்னை:

மிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கப்படுவது குறித்து நாளை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று அகில இந்திய நுழைவு தேர்வுக்கான தேர்வு முடிவு வெளியான நிலையில், வரும் 12ந்தேதி மருத்துவ படிப்புகான கவுன்சிலிங் தொடங்கும் என மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் குறித்த தகவல் நாளை வெளியாகலாம் என்றும், இந்த மாத இறுதியிலேயே கவுன்சிலிங் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2900 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. சென்னை அரசு பல்மருத்துவக் கல்லூரி, 18தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1450பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

மாநில ஒதுக்கீடாக 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2445 எம்பிபிஎஸ் இடங்களும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 127எம்பிபிஎஸ் இடங்களும், தனியார் கல்லூரிகளில் 783எம்பிபிஎஸ் இடங்களும் என மொத்தம் 3355 இடங்கள் உள்ளன.

பல்மருத்துவப் படிப்புக்கு மாநில ஒதுக்கீடாகச் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் 85 இடங்களும், 18 தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் 1020 இடங்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 68 பிடிஎஸ் இடங்களும் என மொத்தம் 1173 இடங்கள் உள்ளன.

இந்தக் கல்லூரிகளில் சேரத் தேசிய அளவில் தரவரிசையில் இடம்பெற்றவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 12முதல் 24வரை நடைபெற உள்ளது. மாநில இடங்களுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு ஜூன் 25 முதல் ஜூலை 5 வரையிலும், இரண்டாம் கட்டக் கலந்தாய்வு ஜுலை 15 முதல் 26வரையிலும் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2018-2019கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாண்டு வகுப்புகள் ஆகஸ்டு மாதத்தில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.