சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு முறையில் இடமாற்ற செயல்முறைகள் நடைபெற்றன.

கடந்த 2019ம் ஆண்டில் நடத்தப்பட்ட கலந்தாய்வுக்குப் பின், பள்ளிகளில் ஏற்பட்ட காலியிடங்களில் பதவி உயர்வு மற்றும் புதிய நியமனங்கள் வழியாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை துவங்கியுள்ளது.

முதற்கட்டமாக, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவின்படி, தலைமை ஆசிரியர் பதவிக்கான காலியிடங்களின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் பதவி காலியாக உள்ள பள்ளிகள், மாவட்டங்கள், அந்தப் பள்ளியில் உள்ள மாணவர் – ஆசிரியர் விகிதாச்சார எண்ணிக்கை ஆகிய விபரங்களையும், இந்த பட்டியலில் இணைத்து தர வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 1, 2020 தேதி நிலவரப்படி, காலியிட விபரங்களை பட்டியல் எடுத்து, w1sec.tndse@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.