டெல்லி:

என்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று டெல்லி உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஏற்கனவே சிபிஐ கைது செய்த வழக்கில் ஜாமின் பெற்றுள்ள சிதம்பரம், அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமின்  பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை முதலில்  சிபிஐ அதிகாரிகள்  கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். அவருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர்நீதி மன்றம் ஜாமின் மறுத்ததைத் தொடர்ந்து, உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கியது.

இதற்கிடையில், அதே வழக்கில், அமலாக்கத்துறையும் சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிதம்பரம் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஜாமின் கேட்டு சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதாக டெல்லி உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கெனவே உச்சநீதி மன்றம் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கினால் திகார் சிறையில் இருந்து சிதம்பரம் வெளியே வர வாய்ப்புள்ளது.