பெரியபாளையம் அருகே சாலை தடுப்பில் கார் மோதி கணவர் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தர்மேந்திரா. இவரது மனைவி பெயர் ஜோதி பிரியா. ஜோதி பிரியாவின் தாய் வீடு ஆந்திர மாநிலம் நகரியில் உள்ளது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தர்மேந்திரா தனது மனைவியுடன் காரில் சென்று இருந்தார். நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தனர். அப்போது, தர்மேந்திரா காரை ஓட்டி வர முன்னிருக்கையில் ஜோதி பிரியா அமர்ந்து வந்தார்.

சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரியபாளையத்தை அடுத்த தானா குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, கார் தர்மேந்திராவின் கட்டுப்பாட்டை இழந்த தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலை தடுப்பில் பயங்கர சத்தத்துடன் கார் மோதியது. இந்த விபத்தில் முன்னிருக்கையில் அமர்ந்து இருந்த ஜோதி பிரியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தர்மேந்திரா படுகாயமடைந்தார். தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவலர்கள், சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை செய்தனர்.

ஜோதி பிரியாவின் உடல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயமடைந்த தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.