இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்க்ஸை இன்று தொடர்ந்த நியூஸிலாந்து அணி 167 ரன்னுக்கு ஆலவுட் ஆனது. இதனால் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

மூன்றாவது நாளான நேற்று ஆட்ட நேர இறுதியில் 140/5 என்ற நிலையில் இருந்த நியூஸிலாந்து அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின் ரவிச்சந்திரன், முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த ஆண்டில் இதுவரை 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின் ஒரே ஆண்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது இது நான்காவது முறை.

இதன் மூலம், மூன்று முறை ஒரு ஆண்டில் 50 விக்கெட் எடுத்த அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் சாதனையை முறியடித்திருக்கிறார் அஸ்வின்.

ஏற்கனவே 2015, 16, 17 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக 50 விக்கெட்டுகளை எடுத்த அஸ்வின் இன்று நான்காவது நாள் ஆட்டம் எஞ்சியிருக்கும் நிலையில் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி தனது எண்ணிக்கையை 52 ஆக உயர்த்தியுள்ளார்.

இந்நிலையில், நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சைமன் டவுல், அஸ்வின் குறித்து விமர்சிப்பவர்களை குறைகூறினார்.

நியூஸிலாந்து அணியும் அதன் வீரர்களும் கூட உள்ளூரில் சோபிப்பது போல் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் அவ்வளவாக சோபிப்பதில்லை.

ஒவ்வொரு வீரருக்கும் சில சிறப்புகள் இருக்கிறது அந்த வகையில் அஸ்வின் சிறப்பாகவே பந்துவீசுகிறார், இருந்தபோதும் அவர் வெளிநாட்டு போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்துவதில்லை என்றும் இந்திய மண்ணில் மட்டுமே விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைக்கிறார் என்றும் அவர் மீது விமர்சனம் வைக்கின்றனர்.

இந்திய மண்ணில் மட்டுமே பெருமளவிலான டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய அணியை பாராட்டும் ரசிகர்கள் இந்திய மண்ணில் மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைக்கிறார் என்பதற்க்காக அஸ்வின் ரவிச்சந்திரனை கொண்டாட மறுப்பது தவறு என்று கூறினார்.