சென்னை: கோவில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

நெல்லையைச் சேர்ந்த அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். அதில் அவர் கேட்டிருந்ததாவது:

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலர்களின் பெயர், வருமானம், நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கிறாரா உள்ளிட்ட பல விவரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள நாளிதழ்களில் பொது அறிவிப்பாக வெளியிடவேண்டும். கோவில் அலுவலகங்களில் பக்தர்களின் பார்வைக்கு இந்த விவரங்கள் வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கோரிய விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது?  அவர்களின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதில் என்ன தவறு?

நிர்வாகிகள் யார் என்பது பற்றி கோவில் அறிவிப்பு பலகையில் ஏன் எழுத கூடாது? என சரமாரி கேள்விகளை எழுப்பினர். விசாரணையின் முடிவில்,  செப்டம்பர் 17ம் தேதிக்குள் பதிலளிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்.