சிறையிலிருந்து விடுதலையாகவுள்ள சசிகலா குறித்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுலா இந்திரா தெரிவித்த கருத்துக்கு, தற்போதைய அதிமுக சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே எச்சரிக்கை கலந்த பதிலை அளித்திருக்கிறார்.

மேலும், பொங்கல் நாளன்று, துக்ளக் ஆண்டுவிழாவில், ஆடிட்டர் குருமூர்த்தி, “சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்த கருத்துக்கும் தற்போது காட்டமாக பதிலடி கொடுத்திருப்பவர் இந்த ஜெயக்குமார்தான்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட, வேறுபல முக்கிய அமைச்சர்கள்கூடி, சசிகலா விவகாரத்தில் நேரடியாக பெரியளவில் வாய்த்திறப்பதில்லை. கேபி முனுசாமி போனறவர்கள்கூட, சமீபகாலங்களில் அமைதியாகிவிட்டார்கள்.

ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் எடப்பாடி பழனிச்சாமி குழுவினரின் குரலாக எதற்காக சசிகலா விஷயத்தில் இந்தளவிற்கு பொங்குகிறார்? என்பது புரியவில்லை.

இவருக்கு ஏதேனும் பழைய பகை இருக்கலாம்; மறுப்பதற்கில்லை. ஆனால், நாளை சசிகலாவை முன்வைத்து அதிமுகவில் எந்தவிதமான மாற்றமும் நேரலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில், ஜெயக்குமாரின் இந்த அரசியல் நிலைப்பாடு சரிதானா? என்ற கேள்வி எழாமல் இல்லை.