மதுரை: தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள  60 ஆயிரம் கல்வெட்டுக்களும் தமிழுக்கானவை எனும் போது அதனை திராவிட மொழி கல்வெட்டுக்கள் என அடையாளப்படுத்துவது ஏன் என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள் மத்தியஅரசுக்கு சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளனர்.

பண்டைய தமிழர்களின் கலாச்சாரம், வீரம், விஞ்ஞானத்தை தமிழகத்தில் நடைபெற்று வரும் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் பொருட்கள் நிரூபித்து வருகின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்க்குடி வாழ்ந்து வந்துள்ளது, அகழ்வாய்வுகள் மூலம் தெரிய வந்துளளது. தற்போத தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம்   கீழடி, கொந்தகை உள்பட 5 இடங்களிலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சில பகுதிகளிலும் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் நெல்லை மாவட்டம் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் எஸ்.காமராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதுபோல, மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் கடநத் விசாரணையின்போது   பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் தெரிவித்த தமிழக அரசு வழக்கறிஞர், முழு விபரங்களையும் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. 4 தமிழ் கல்வெட்டியலாளர்களும் 2 பேர் சென்னையிலும், 2 பேர் மைசூரிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, சென்னையில் சமஸ்கிருதத்திற்கென கல்வெட்டியலாளர்கள் உள்ளனரா? எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, மத்திய அரசுத்தரப்பில் 1 சமஸ்கிருத கல்வெட்டியலாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டது

அதற்கு நீதிபதிகள், ” இந்தியாவில் கண்டறியப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழிக்கானவை. அவ்வாறிருக்கையில் தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, 60 ஆயிரம் கல்வெட்டுக்களும் தமிழுக்கானவை எனும் போது அதனை திராவிட மொழி கல்வெட்டுக்கள் என அடையாளப்படுத்துவது ஏன்? என கேல்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அரசுத்தரப்பில், “அது அரசின் கொள்கை முடிவு”  என பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவு எனினும் ஒன்றன் அடையாளத்தை மறைக்கும் வகையில் அது இருத்தல் கூடாது என்று கூறியதுடன், நாட்டின் அனைத்து மொழிகளும் முக்கியமானவை. ஆனால் அதனதன் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டனர்.

இதையடுத்து, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  அதற்கு நீதிபதிகள்,  மத்திய அரசு கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவது போல் தெரிகிறது.

கண்டறியப்பட்டுள்ள 1 லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியைச் சார்ந்தவை. அவ்வாறிருக்கையில் மைசூரில் கல்வெட்டுக்களை ஏன் வைக்க வேண்டும்? கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் காவிரி பிரச்சனை இருக்கும் நிலையில் தமிழகத்திலேயே கல்வெட்டுகளை பாதுகாத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கலாமே? என கேள்வி எழுப்பினர்.

மேலும, தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 758 பணியிடங்கள் எந்தெந்த பணிகளுக்கானவை? எந்தெந்த மொழிக்கு எத்தனை இடங்கள்? என்ன பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், தொல்லியல்துறையின் கல்வெட்டியல் பிரிவு அதிகாரி ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்திருக்கிறார்கள்.