மதுரை

மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலக அதிகாரி அறையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

டாக்டர் சுரேஷ் பாபு என்பவர் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் ஆவார். அமலாக்கத்துறை இவர் மீது வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கு விசாரணையும் முடிவடைந்தது. ஆயினும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீண்டும் அமலாக்கத்துறை வழக்கை எடுக்காமல் இருக்க டாக்டர் சுரேஷ் பாபுவிடம் ரூ 1 கோடி லஞ்சம் கேட்டுள்ளார்.

இதையொட்டி டாக்டர் சுரேஷ் ஏற்கனவே ரூ20 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். இருப்பினும் உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் தர வேண்டும் என்பதால் மேலும் ரூ. 51 லட்சம் லஞ்சம் கேட்டிருக்கிறார். எனவே லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் தெரிவித்தார்.

புகாரின் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூ. 31 லட்சம் ரூபாய், அங்கித் திவாரியிடம் டாக்டர் சுரேஷ்பாபுவால் கொடுக்கப்பட்டது. அங்கித் திவார் லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட உடனேயே சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.  அந்தித் திவாரியை விரட்டிச் சென்ற திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வழிமறித்து கைது செய்து அவரிடம் இருந்த லஞ்சப் பணம் ரூ31 லட்சமும் மொத்தமாகக் கைப்பற்றினர்.

அங்கித் திவாரியின் கூட்டாளிகள் யார்? அங்கித் திவாரி யாருக்கு எல்லாம் லஞ்சப் பணத்தை பங்கிட்டு கொடுத்தார் எனப் பல மணிநேரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மதுரையில் உள்ள அங்கித் திவாரி வீடு, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நேற்று மாலை தொடங்கி, விடிய விடியத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது, சி.ஆர்.பி.எப். காவல்துறையினர் இரவில் பாதுகாப்புக்காக வந்தனர். பாதுகாப்புக்கு வந்த சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினருக்குத் தமிழகக் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டதால் 5 மணி நேரமாக வெளியே காத்துக்கொண்டிருந்த அவர்கள், பின்னர் திரும்பிச்சென்றனர்.

தமிழக காவல்துறையினர் பாதுகாப்புடன் மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

இதுவரை மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் வீடு மற்றும் அவர் அலுவலகத்தில் பயன்படுத்திய 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நீதிபதி முன்பு முன்னிறுத்திய நிலையில், தொடர்ந்து, வருகிற15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் நுழைந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை பல மணிநேரம் அதிரடி சோதனை நடத்தியதும் அமலாக்கத்துறை அதிகாரியைச் சுற்றி வளைத்து கைது செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.