சென்னை:

தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது வரும் 23ம் தேதி தெரியும் என்று கூறிய முதல்வர்,  இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்று கூறினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர் களை  சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த எடப்பாடி,  பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்று கூறினார்.

மேலும், அதிமுக மாநில கட்சிதான், தேசிய கட்சி அல்ல. எனவே, தமிழகத்தை பொருத்தவரை மட்டுமே என்னால் கருத்து கணிப்பு பற்றி சொல்ல முடியும், தேசிய அளவில் சொல்ல முடியாது என்று ஜகா வாங்கியவர்,  2016 தேர்தலில் நான் தோல்வி அடைவேன் என கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் நான் வெற்றி பெற்றேன். சேலத்தில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது என்று கூறினார்.

தேர்தலில் .  யார் வெற்றி பெறுவார்கள் என்பது 23ம் தேதி தெரியும் என்று கூறியவர்,  பாராளுமன் றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் ஹைட்ரோ கார்பன் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு, விவசாயி களுக்கு எதிரான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று தெரிவித்தவர், மக்களின் நன்மைக்காகவே புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன. வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சாலை விரிவாக்கம் தேவைப்படுகிறது. இன்றைய சூழலுக்கு ஏற்ப புதிய சாலைகள் உருவாக்கப் பட்டு வருகிறது  விபத்துக்களை தவிர்க்கும் வகைகள் சாலைகள் போடப்படுகின்றன என்று கூறியவர்,  வெறும் 7 சதவீத விவசாயிகள் மட்டுமே சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் கூறினார்.