கோவை,

னியார் தொலைக்காட்சியில் வெளியான பிக்பாஸ்  நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை ஓவியா, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசன் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அப்போது, நடிகர் ரஜினி குறித்து தனக்கு தெரியாது என்றும்,  நடிகர் கமல் அரசியலுக்கு வந்தால் தான் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ் உடன் ஏற்பட்ட காதல் முறிவு காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக இடையிலேயே வெளியேற்றப்பட்ட நடிகை ஓவியாவுக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது.

இதன் காரணமாக பல்வேறு தனியார் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரகிறார். இந்நிலையில், தனியார் கல்லூரி நிகழ்ச்சிக்காக கோவை வந்துள்ள நடிகை ஓவியா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

என்னை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது.   இன்றைய சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய விரும்புகிறேன். அதற்காக என்னை முதலில் தயார் செய்து கொள்கிறேன். நல்லது செய்ய வேண்டும் என்பது என் ஆத்ம திருப்திக்காகதான் என்றார்.

மேலும் கமலின் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓவியா,

அரசியல் என்பது காமெடியான வி‌ஷயம் அல்ல. அது ஒரு சேவை. சேவை செய்ய அரசியல் மிகப்பெரிய அடித்தளம். தற்போது பலர் புகழ் மற்றும் பணத்திற்காக அரசியலை தவறாக பயன்படுத்துகின்றனர்.

ஆனால்,  கமலஹாசன் அப்படிப்பட்டவர் அல்ல. அவரிடம் ஏற்கனவே புகழ், பணம் உள்ளதால் அரசிலுக்கு வந்தால் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வார் என நம்புகிறேன். கமல்ஹாசன் எனக்கு பிடித்தவர் மட்டுமின்றி மனிதாபிமானவர். அவர் அரசியலுக்கு வரவேண்டும்.

இதுவரை சினிமாவில் நடித்த அவர் இனிமேல் அரசியலுக்கு வர நினைத்திருக்கலாம். அதனால் தான் அவர் அரசியல் சார்ந்த கருத்துக்களை தெரிவிக்கிறார். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் என்னுடைய ஆதரவு அவருக்குதான். அவர் அரசியலுக்கு வர உள்ளதால் சினிமாவுக்கு ஓய்வு கொடுக்க மாட்டார் என நினைக்கிறேன். ஏனென்றால் சினிமாவில் கலைஞனுக்கு எப்போதுமே ஓய்வு கிடையாது என்றார்.

நடிகர் ரஜினி பற்றிய கேள்விக்கு,  நடிகர் ரஜினியை தனிப்பட்ட முறையில் தெரியாது என்றும், ஆனால் கமல் பற்றி தெரியும் என்றார்.

மேலும் தனக்கு அரசியல் பற்றி  எதுவும் தெரியாது. படங்களில் நடிக்கவே தற்போது நான் முழு கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது நான் ‘காஞ்சனா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளேன். சினிமாவில்  நான் இதுவரை யாரையும் போட்டியாக நினைத்தது இல்லை என்றார்.

என்னை மகிழ்வித்த மக்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்வேன்.

இவ்வாறு நடிகை ஓவியா கூறினார்.