உலகக்கோப்பை லீக் போட்டிகள் பாதி தூரத்தைக் கடந்துவிட்ட நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் மட்டுமே அரையிறுதியை எட்டும் வாய்ப்பை அதிகம் பெற்றுள்ளன என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

இதற்கேற்றாற்போல், புள்ளிகள் பட்டியலிலும் இந்த 4 அணிகளும், முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளன. அதேசமயம், புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்பு, வங்கதேசம், மேற்கிந்திய அணிகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கும் சுத்தமாக இல்லை என்று கூறிவிட முடியாது.

அவர்கள் தாங்கள் இன்னும் ஆடவேண்டிய ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டால் அதற்கான வாய்ப்புள்ளது என்றே கூறலாம். அதேசமயம், தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை நம்பிக்கை வட்டத்திற்கு வெளியே சென்றுவிட்டன. ஆஃப்கானிஸ்தான் அணியைப் பற்றி எதுவும் தனியாக சொல்லத் தேவையில்லை.

இங்கிலாந்து – இந்தியா, ஆஸ்திரேலியா – இங்கிலாந்து, நியூசிலாந்து – ஆஸ்திரேலியா, இங்கிலாந்து – நியூசிலாந்து என்று சுவாரஸ்யம் நிறைந்த மற்றும் சவாலான போட்டிகள் இன்னும் நடைபெற வேண்டியுள்ளது. அதேபோன்று பாகிஸ்தான் – வங்கதேசம் போட்டியும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இடையில் மழைவந்து சில பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், 4வது இடம்தான் மாறுமே ஒழிய, முதல் 3 இடங்களுக்கான போட்டி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகளுக்குத்தான்.