மதுரை:

டாஸ்மாக் தொடர்பான வழக்கில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது மூடப்படும் என தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த விசாரணையின்போது, கடந்த  2016ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில்  மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை என்ற விவரங்களை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய விசரணையை தொடர்ந்து,  டாஸ்மாக் இயக்குனர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டு உள்ளது. 

தமிழக அரசு விற்பனை செய்து வரும் டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு, மதுரை உயர்நீதி மன்றத்தில்,  நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் கடந்த விசாரணையின்போது, மது விற்பனை மட்டும் தான் அரசுக்கு வருமானமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மது விற்பனை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க முடியுமா என்றும், இதுவரை மூடப்பட்ட கடைகள் எத்தனை என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக அரசு சார்பில், மூடப்பட்ட கடைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மார்ச் 4ந்தேதி  நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணை மார்ச் 4ந்தேதி ஒத்தி வைக்கப்பட்டது.