தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சமூக வலைத்தளம் மூலம் பரப்பப்படும் தவறான செய்தி மற்றும் போலி தகவல்களை தடுக்கும் விதமாக உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது.

அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளை கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு அமைக்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடைவிதிக்கக் கோரி அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நிர்மல்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அரசின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சி எனவும் மக்களின் பேச்சுரிமை மீதான தாக்குதல் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தவிர, சமூக வலைதளங்களில் தவறான மற்றும் ஆபாச கருத்துகள் பகிரப்படுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க சமூக ஊடக பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் வழக்கு ஒன்றின் மீதான விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

அப்படி இருக்க, காவல்துறைக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள இந்த உண்மை சரிபார்ப்புக் குழு காவல்துறையின் வரம்பிற்குள் தமிழக அரசு தலையிடுவதாக உள்ளது என்றும் இதுபோன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இது சம்பந்தமாக மத்திய அரசு ஏற்கனவே 2021 விதிகள் வகுத்துள்ளது. தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரிபார்ப்பு குழு, தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு முரணானது என்றார்.

மேலும், உண்மை சரிபார்ப்பு குழுவை அமைக்க மத்திய அரசுக்குதான் அதிகாரம் உள்ளது. இது அரசின் கையில் உள்ள ஆபத்தான ஆயுதம் எனவும் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, பொய் செய்திகள் பரவுவதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாதா? இது ஒரு தணிக்கை முறை தானே? இதில் என்ன தவறு ? காவல்துறைக்கு உதவத்தானே அமைக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பீகார் தொழிலாளர்கள் தொடர்பான தவறான தகவல்கள் பரவியது குறித்து சுட்டிகாட்டினார். குழுவில் தகுதியான நபரை தான் நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, மத்திய அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்பு குழுவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த வழக்கின் முடிவை தெரிந்துகொள்ள வேண்டும் என கூறி, அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.