சென்னை:

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் நளினியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது?”  என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க தனக்கு  6மாதம் பரோல் வேண்டும் என்று ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினி சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த  ஏப்ரல் மாதம் 15ந்தேதி மனு தாக்கல் செய்தார். அதில், ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் உள்ள போதும்,  கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தான் வழங்கிய பரோல் விண்ணப்பத்தை வேலூர் சிறை நிர்வாகம் பரிசீலிக்கவில்லை என்றும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என்றும் நளினி மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து, ஜூன்11ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது,  ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், நளினி , தனது மகள் திருமண ஏற்பாடு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை என்றும்  உயர்நீதிமன்றத்தில்  நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் நளினியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது என்பது குறித்து  பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.