சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டில் திமுக அரசின் நிலைப்பாடு என்ன? என்று கவர்னர் உரை மீதான விவாதத்தின்போது, அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.  ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில்,  விராலிமலை தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசினார்.

நீட் எதிர்ப்புக் கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் கடந்தாண்டு நீட் தேர்வு நடைபெற்றது. இந்தாண்டு நீட் தேர்வு தமிழ்நாட்டில் இருக்கிறதா இல்லையா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டில் 2.5 விழுக்காடு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தற்போதைய அரசின் நிலைப்பாடு என்ன” .

அப்போது, “அதிமுக தமிழ்நாடு அரசுக்கு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்று கூறியவர், நாடு முழுவதும் 2019 டிசம்பர் மாதத்தில் என்ன வைரஸ் பரவுகிறது என்று தெரியாத சூழலில், அப்போதைய அதிமுக அரசு மருத்துவத் துறையில் வலுவான ஒரு கட்டமைப்பை உருவாக்கியது என்றவர்,   தற்போது தொற்று பரவல் குறைவு காரணமாக, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும்,  நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

மக்கள் கொரோனா மூன்றாவது அலை குறித்து  அச்சத்தில் இருக்கின்றனர்,  அது குழந்தைகளைத் தாக்கும் எனக் கூறுகின்றனர். அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.  குழந்தைகள் நல மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் படுக்கைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்த ஆறு கோடி பேருக்கு இலக்கு நிர்ணயித்து இதுவரை ஒரு கோடி பேருக்கு மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.